1. தமிழ்விடு தூது
தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான
முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்
குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு
உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்
வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச்
சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே
2. பெரியபுராணம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்
- சேக்கிழார்
3. புறநானூறு
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!
- குடபுலவியனார்
4. திருக்குறள்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
- திருவள்ளுவர்
5. ஓ என் சமகாலத் தோழர்களே!
அறிவியல் என்னும் வாகனம் மீதில்
ஆளும் தமிழை நிறுத்துங்கள்
கரிகா லன்தன் பெருமை எல்லாம்
கணிப்பொறி யுள்ளே பொருத்துங்கள்
ஏவும் திசையில் அம்பைப் போல
இருந்த இனத்தை மாற்றுங்கள்
ஏவு கணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.
- வைரமுத்து
6. உயிர்வகை
ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே
7. சிறுபஞ்சமூலம்
பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,
விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு
உரையாமை செல்லும் உணர்வு.
- காரியாசன்
8. இராவண காவியம்
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லைஅம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல்அம் செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்
- புலவர் குழந்தை
9. திருக்குறள்
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
- திருவள்ளுவர்
10. சீவக சிந்தாமணி
சொல்அரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருஇருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே.
11. முத்தொள்ளாயிரம்
அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு.
12. யசோதர காவியம்
ஆக்குவது ஏதெனில் அறத்தை ஆக்குக
போக்குவது ஏதெனில் வெகுளி போக்குக
நோக்குவது ஏதெனில் ஞானம் நோக்குக
காக்குவது ஏதெனில் விரதம் காக்கவே.
13. அக்கறை
சைக்கிளில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்க்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை
- கல்யாண்ஜி
No comments:
Post a Comment